My photos

photos

via My photos.

My photos

ஆசிரியர் தகுதி தேர்வு : 22ம் தேதி முதல் விண்ணப்பம்

சென்னை, மார்ச் 7 : தமிழகத்தில்  வரும் ஜுன் மாதம் நடைபெற உள்ள ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு மார்ச் 22ம் தேதி முதல் அனைத்து மாவட்ட கல்வி அலுவலகங்களிலும் விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளது.

 

 

ஆசிரியர்களாக பணியாற்ற ஆசிரியர் தகுதித் தேர்வினை எழுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியம் என்று மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, ஏற்கனவே ஆசிரியராக பணியில் இருப்பவர்களுக்கும், ஆசிரியர் படிப்பு முடித்தவர்களுக்கும் வசதியாக ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது.

 

 

மாநில அளவிலும், மத்திய அளவிலும் இத்தேர்வுகள் நடத்தப்படும். மாநில அளவிலான ஆசிரியர் தகுதித் தேர்வு வரும் ஜுன் மாதம் நடைபெற உள்ளது. இத்தேர்வை எழுத விரும்பும் ஆசிரியர்கள் மாவட்ட கல்வி அலுவலகங்களில் வழங்கப்படும் விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து, அதனுடன் இணைந்துள்ள செல்லானை பூர்த்தி செய்து ஸ்டேட் பாங்கில் ரூ.500 செலுத்த வேண்டும்.

2,895 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்

2,895 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்
வள்ளியூரான்

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்காக தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாட்டில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் ஒன் மற்றும் பிளஸ் டூ வகுப்பு நடத்தும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான தேர்வை தற்போது தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. மொத்தம் 2,895 காலிப் பணியிடங்கள் உள்ள இந்தத் தேர்வு வரும் மே மாதம் 27ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இதில் மொத்த காலிப் பணியிடங்களில் 2,859 பணியிடங்கள் முதுநிலை ஆசிரியர்களுக்கும் 36 காலிப் பணியிடங்கள் உடற்கல்வி இயக்குநர் கிரேடு 1 பணியிடங்களுக்கும் ஒதுக்கப்படுகின்றன.

தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, புவியியல், பொருளாதாரம், வணிகவியல், பொலிட்டிக்கல் சயின்ஸ், ஹோம் சயின்ஸ், இந்திய கலாசாரம், பிசிக்கல் எஜுக்கேஷன், தெலுங்கு, உருது உள்ளிட்ட பாடங்களைத் தேர்வு செய்த விண்ணப்பதாரர்கள் இந்தப் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர், ஏதேனும் ஒரு பாடத்தில் இளநிலைப் பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருப்பதோடு, அதே படிப்பில் முதுநிலைப் பட்டப் படிப்பும் படித்திருக்க வேண்டும். கூடவே பி.எட்., படிப்பிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உடற்கல்வி இயக்குநர் கிரேடு-1 பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் உடற்கல்வியில் இளநிலைப் பட்டப் படிப்பு, கூடவே அதே பாடத்தில் முதுநிலைப் பட்டப் படிப்பு படித்திருக்கலாம் அல்லது ஏதேனும் ஓர் இளநிலைப் பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், அதனுடன் உடற்கல்வி பாடத்தில் முதுநிலைப் பட்டப் படிப்பு படித்திருக்கலாம். ஆனால், பத்தாம் வகுப்பு வரையிலான தமிழ்ப் பாட அறிவை விண்ணப்பதாரர்கள் பெற்றிருக்க வேண்டியது அவசியம்.

எழுத்துத் தேர்வு மதிப்பெண்களுடன், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாணவர்கள் பதிவு செய்த ஆண்டுகள் மற்றும் பணி முன் அனுபவம் போன்றவை கருத்தில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. முதுநிலை ஆசிரியர் பணியில் ஓர் ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்களுக்கு ஒரு மதிப்பெண்ணும் 5 ஆண்டுகள் வரை முன் அனுபவம் உள்ளவர்களுக்கு 2 மதிப்பெண்களும், 5 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் உள்ளவர்களுக்கு 3 மதிப்பெண்களும் அளிக்கப்படுகின்றன. அதேபோல வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களுக்கு, பதிவு செய்து 5 ஆண்டுகள் வரை பதிவு மூப்பு பட்டியலில் காத்திருப்பவர்களுக்கு 2 மதிப்பெண்களும், 10 ஆண்டுகள் வரை காத்திருந்தோருக்கு 3 மதிப்பெண்களும், 10 ஆண்டுகளுக்கு மேல் காத்திருந்தோருக்கு 4 மதிப்பெண்களும் கூடுதலாக அளிக்கப்படும் என்பதை மாணவர்கள் நினைவில் கொள்ளவேண்டும். வயது வரம்பு 57 வயதுக்கு குறைவாக இருக்க வேண்டும்.

இதற்கான விண்ணப்பங்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட தலைமை கல்வி அலுவலகங்களிலும் கிடைக்கும். விண்ணப்பக் கட்டணம் ரூ. 50. தேர்வுக் கட்டணம் ரூ. 500. எஸ்.சி., எஸ்.டி., பிரிவு மாணவர்களுக்கு தேர்வுக் கட்டணம் ரூ.250.

இதற்கான எழுத்துத் தேர்வு மொத்தம் 3 மணி நேரம். மொத்த மதிப்பெண்கள் 150. முக்கியப் பாடத்திற்கு 110 மதிப்பெண்களும், எஜுகேஷனல் மெத்தடாலஜி பாடத்திற்கு 30 மதிப்பெண்களும், பொது அறிவுப் பாடத்திற்கு பத்து மதிப்பெண்களும் அளிக்கப்படுகின்றன. கேள்வித்தாள் முற்றிலும் அப்ஜக்ட்டிவ் முறையில் அமைந்திருக்கும். தவறான கேள்விகளுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் கிடையாது. விடைத்தாளில் விடைக்கான வரிசை எண்களை நீலம் அல்லது கறுப்பு மை பால்பாயிண்ட் பேனாவினால் மட்டுமே நிழலிட வேண்டும். பாடத்திட்டங்கள் குறித்த விவரங்கள் ஆசிரியர் தேர்வாணைய இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. தேர்ந்து எடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் ஹால் டிக்கெட் அவரவர் முகவரிக்கு தேர்வுத் துறையால் அனுப்பப்படும். தேர்வுக்கு மூன்று நாட்களுக்கு முன்புவரை ஹால் டிக்கெட் கிடைக்கப்பெறாத விண்ணப்பதாரர்கள் ஆசிரியர் தேர்வாணைய இணையதளத்தில், தங்களின் தேர்வு மையம் மற்றும் பதிவு எண்களைத் தெரிந்துகொண்டு, சம்பந்தப்பட்ட தேர்வு மையத்திற்கு நேரடியாக சென்று ஹால் டிக்கெட்டை பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி: மார்ச் 30.

விவரங்களுக்கு: http://trb.tn.nic.in

சி.பி.எஸ்.இ கல்வி வாரியம் – ஒரு பார்வை

சி.பி.எஸ்.இ கல்விமுறையில் தங்களது பிள்ளைகள் படிப்பதை பெருமையாக கருதும் பெற்றோர்கள் மிக அதிகம். அதனால் எதிர்கால வாழ்வு வளம்பெறும் என்ற எண்ணமும் வலுவாக உள்ளது. எனவே, அந்த சி.பி.எஸ்.இ கல்வி வாரியத்தின் வரலாற்றைப் பற்றி அறிந்துகொள்வது பலருக்கும் நல்லதுதானே! இக்கட்டுரை அதற்கான அலசலை மேற்கொள்கிறது.

சி.பி.எஸ்.இ என்ற கல்வி வாரியம், இன்றைய நிலையை அடைவதற்கு முன்பாக பல மாற்றங்களைக் கண்டுள்ளது. கடந்த 1921ம் ஆண்டு, முதன்முதலாக, உயர்நிலைப் பள்ளி மற்றும் இண்டர்மீடியேட் கல்விக்கான U P வாரியம் ஏற்படுத்தப்பட்டது. ராஜ்புதனா, மத்திய இந்தியா மற்றும் குவாலியர் ஆகிய பகுதிகளில் மட்டுமே இந்த வாரியம் இயங்கியது. 1929ம் ஆண்டு, அப்போதைய இந்திய அரசாங்கம், உயர்நிலைப் பள்ளி மற்றும் இண்டர்மீடியேட் கல்வி, ராஜ்புதனா, என்ற பெயரில், அனைத்துப் பகுதிகளுக்குமான ஒரு கல்வி வாரியத்தை ஏற்படுத்த பரிந்துரைத்தது. இந்த வாரியமானது, ஆஜ்மீர், மார்வார், மத்திய இந்தியா மற்றும் குவாலியர் ஆகிய பகுதிகளில் இயங்கத் தொடங்கியது.

இந்தக் கல்விமுறையை, உயர்நிலைக் கல்வி நிலையில் பரவலாக பயன்படுத்தியதால், கல்வி நிறுவனங்களின் கல்வி செயல்பாட்டில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. நாட்டின் பல பகுதிகளில் பல பல்கலைக்கழகங்களும், பல பள்ளிக் கல்வி வாரியங்களும் தோன்ற ஆரம்பித்த காலங்களில், இந்த வாரியத்தின் செயல்பாடு ஆஜ்மீர், போபால் மற்றும் விந்தியப் பகுதிகள் ஆகியவற்றில் மட்டுமே இருந்தது. இந்நிலையில், கடந்த 1952ம் ஆண்டு, இதன் செயல்பாடு C மற்றும் D பிரிவைச் சேர்ந்த பகுதிகளிலும் விஸ்தரிக்கப்பட்டது.

அப்போதுதான் இந்த வாரியத்திற்கு CBSE என்ற பெயரும் வந்தது. மேலும், 1962ம் ஆண்டில்தான் இந்த வாரியம் மறுஉருவாக்கம் செய்யப்பட்டது. கல்வி நிறுவனங்களுக்கு சிறந்த முறையில் உதவி புரிவது மற்றும் அடிக்கடி பணி மாற்றல்களுக்கு உள்ளாகும் மத்திய அரசு ஊழியர்களின் குழந்தைகளுடைய கல்வித் தேவைகளை ஈடுசெய்தல் போன்றவை இந்த வாரியத்தின் முக்கிய நோக்கங்கள்.

வாரியத்தின் இன்றைய செயல்பாட்டு எல்லை

இந்த வாரியத்தின் இன்றைய செயல்பாட்டு எல்லையானது, தேசிய மற்றும் புவியியல் எல்லைகளைக் கடந்து வியாபித்துள்ளது. இந்தக் கல்வி வாரியத்தை மறுஉருவாக்கம் செய்ததால், அப்போதைய Delhi Board of Secondary Education, மத்திய வாரியத்துடன் இணைக்கப்பட்டது. இதனால், டெல்லி வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும், மத்திய வாரியத்தின் அங்கங்கள் ஆயின. பின்னர், சண்டிகர், அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகள், அருணாச்சல பிரதேசம், சிக்கிம், ஜார்க்கண்ட், உத்ரகாண்ட் மற்றும் சத்தீஷ்கர் ஆகிய இடங்களிலுள்ள அனைத்துப் பள்ளிகளும், இந்த வாரியத்தின் அங்கீகாரத்தைப் பெற்றன.

கடந்த 1962ம் ஆண்டு வெறும் 309 பள்ளிகளைக் கொண்டிருந்த இந்த வாரியம், 31-03-2007 காலகட்டம் வரை, 8979 பள்ளிகளைக் கொண்டிருந்தது. இவற்றில், 21 வெளிநாடுகளிலுள்ள 141 பள்ளிகளும் அடக்கம். மற்றபடி, 897 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளும், 1761 அரசுப் பள்ளிகளும், 5827 தனி பள்ளிகளும், 480 ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளும் மற்றும் 14 மத்திய திபெத்தியன் பள்ளிகளும் அடங்கும்.

நிர்வாகப் பிரிவுகள்

இந்த வாரியத்தின் செயல்பாட்டை செம்மைப்படுத்தி, நாடெங்கும் பரந்திருக்கும் பள்ளிகளின் தேவையை சிறப்பாகப் பூர்த்தி செய்வதற்கு, இந்த வாரியத்தின் பல பிராந்திய அலுவலகங்கள் ஏற்படுத்தப்பட்டன. இந்த வாரியத்தின் பிராந்திய அலுவலகங்கள், டெல்லி, அலகாபாத், சென்னை, ஆஜ்மீர், குவஹாத்தி மற்றும் பன்ச்குலா போன்ற இடங்களில் உள்ளன. இந்தியாவிற்கு வெளியே இருக்கும் CBSE பள்ளிகள், டெல்லியிலுள்ள பிராந்திய அலுவலகத்தால் கவனிக்கப்படுகின்றன.

பிராந்திய அலுவலகங்களுக்கென்று குறிப்பிட்ட அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தாலும், அதன் செயல்பாடுகள், தலைமை அலுவலகத்தால் கண்காணிக்கப்பட்டு, முறைப்படுத்தப்படுகின்றன. கொள்கை ரீதியிலான முடிவகள் அனைத்தும், தலைமை அலுவலகத்துடன் கலந்துரையாடியே எடுக்கப்பட முடியும். மற்றபடி, அன்றாட நிர்வாகங்கள், பள்ளிகளுடனான தொடர்புகள் மற்றும் தேர்வுக்கு முந்தைய மற்றும் பிறகான ஏற்பாடுகள் உள்ளிட்ட செயல்பாடுகளை, பிராந்திய அலுவலகங்களே கையாளும்.

நிதி கட்டமைப்பு

CBSE வாரியம் ஒரு சுயநிதி அமைப்பு. அடிக்கடி ஏற்படும் செலவினங்கள் மற்றும் எப்போதாவது ஏற்படும் செலவினங்கள் ஆகியவற்றுக்கான நிதியை, மத்திய அரசு அல்லது வேறு எந்த ஆதாரங்களிலிருந்தும் இந்த வாரியம் பெறுவதில்லை. அனைத்துவித நிதி தேவைகளும், வருடாந்திர தேர்வு கட்டணங்கள், அங்கீகார-இணைப்பு கட்டணங்கள், PMT(Pre Medical Test) -க்கான சேர்க்கை கட்டணம், ஏஐஇஇஇ தேர்வுகள் மற்றும் வாரிய வெளியீடுகள் ஆகியவற்றிலிருந்தே திரட்டப்படுகின்றன.

பிரதான நடவடிக்கைகள் மற்றும் நோக்கங்கள்

* பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்புகளுக்கான இறுதித் தேர்வுகளை நடத்துதல் மற்றும் அத்தேர்வு நடைமுறைகளை உருவாக்குதல். அத்தேர்வுகளில் தேறிய இணைப்பு பள்ளிகளின் மாணவர்களுக்கு, தகுதி சான்றிதழ்களை வழங்குதல்.

* அடிக்கடி பணிமாற்றத்திற்கு உள்ளாகும் பெற்றோர்களுடைய குழந்தைகளின் கல்வித் தேவைகளை நிறைவுசெய்தல்.

* நாட்டின் கல்வித் தரத்தை மேம்படுத்தவும், தேர்வுகளுக்காகவும், கல்வி நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்கி இணைத்துக் கொள்ளுதல்.

பிரதானப் பணிகள்

* மாணவர் நலன் சார்ந்த மற்றும் மாணவர்களை மையப்படுத்திய கற்பித்தல் திட்டங்களை உருவாக்குதல்.

* தேர்வு மற்றும் திருத்துதல் செயல்முறைகளை சீர்திருத்துதல்

* பணி தொடர்பான மற்றும் பணித் திறன்கள் இணைந்த கற்றல் முறைகளை பயன்படுத்தல்.

* பயிற்சி திட்டங்கள் மற்றும் பயிற்சி பட்டறைகளை தொடர்ச்சியாக செயல்படுத்தி, இந்த வாரியத்தின் ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகளின் திறனை மேம்படுத்தல்.

Creative Arts

This slideshow requires JavaScript.

‘காட்டு கருவேல மரங்களை’ வெட்டி வீழ்த்துவோம்…..!

Imageமரங்களை வெட்டுங்கள்!!

சமீபத்தில் ஒரு forward mail ல் வந்த விஷயம் உங்கள் பார்வைக்கு…..

உலகமே ஒட்டு மொத்தமாக வெப்பமயமாதல் (குளோபல் வார்மிங்) பற்றி பயந்து கொண்டு இருக்கும், இன்றைய காலகட்டத்தில் ‘மரங்களை நடுங்கள்’ என்ற ஒரே கோஷம் தான் எங்கும் கேட்கிறது, இந்த நேரத்தில் ‘மரங்களை வெட்டுங்கள்’ என்று கூறுவது முரண்பாடாக தோன்றுகிறது அப்படிதானே. ஆனால் இங்கே நான் சொல்வதை முழுவதும் கவனித்தால் நீங்களும்’ ஆமாம் கண்டிப்பாக வெட்ட வேண்டும் ‘ என்று சொல்வீர்கள். அப்படி அந்த மரத்தை வெட்டினால் தான் நம் மண்ணின் மாண்பை காப்பாற்ற முடியும் என்பதுதான் விஞ்ஞானிகள் நமக்கு கொடுக்கும் ஒரே எச்சரிக்கை.

மண்ணின் வில்லன் 
அமெரிக்க தாவரவியல் பூங்கா , ‘வளர்க்க கூடாத நச்சு மரங்கள்’ என்று ஒரு தனி பட்டியலே வெளியிட்டு இருக்கிறது. அதில் முன்னணியில் இருப்பது தான் நான் குறிப்பிட போகிற விஷ மரம். தமிழ் நாட்டின் ரோட்டின் ஓரங்களிலும், பல கிராமங்களின் வயல்வெளிகளிலும் சகஜமாக இருக்க கூடிய முள் மரம் எனப்படும் ‘காட்டு கருவேல மரம்’ தான் அது. (பேராண்மை படத்தில் கூட ஜெயம்ரவி மாணவிகளுடன் சேர்ந்து காட்டுக்குள் இருக்கும் மரத்தை
வெட்டிகொண்டே விளக்கம் சொல்வாரே ! )
நம் மண்ணின் தன்மையை கெடுப்பதற்காக வெளி நாட்டினர் இந்த மரத்தின் விதையை இங்கு தூவியதாக ஒரு கருத்தும், கிராம மக்களுக்கு அடுப்பு எரிக்க விறகு வேண்டும் என்பதற்காக ஒரு அரசியல்வாதி (நல்ல எண்ணம்தான், இதன் நச்சு தன்மை பற்றி தெரியாமல் இருந்திருக்கலாம்) வெளிநாட்டில் இருந்து தருவித்ததாகவும் இரு விதமான கருத்துகள் உலவுகின்றன. உண்மை எதுவென்று ‘யாம் அறியேன் பராபரமே’ 
ஆனால் எப்படி வந்தது என்பது அல்ல…., இப்போதைய பிரச்சனை….!?, இம்மரத்தால் என்னவெல்லாம் பாதிப்பு ஏற்படுகிறது என்று பார்பதுதான் அவசியம். முதலில் இந்த மரத்தின் தன்மைகளை பார்க்கலாம்.

இதன் கொடூரமான குணங்கள்
இவை எந்த வித வறட்சியிலும் நன்கு வளரக்கூடியது . மழை பெய்யாமல் போனாலும், நிலத்தில் நீரே இல்லாமல் இருந்தாலும் இவை கவலை படாது.பூமியின் அடி ஆழம் வரை கூட தன் வேர்களை அனுப்பி நீரை உறிஞ்சி, தன் இலைகளை வாடவிடாமல் பார்த்து கொள்கிறது. இதனால் நிலத்தடி நீர் முற்றிலுமாக வற்றி அந்த பூமியே வறண்டு விடுகிறது…!
இதன் கொடூரம் அத்துடன் நிறைவு பெறுவது இல்லை, ஒருவேளை நிலத்தில் நீரே கிடைக்கவில்லை என்றாலுமே தன்னை சுற்றி தழுவி செல்லும் காற்றில் இருக்கும் ஈரபதத்தையும் இம்மரம் உறிஞ்சிவிடுகிறது. இப்படி காற்றின் ஈரபதத்தையும், நிலத்தடி நீரையும் இழந்து அந்த பகுதியே வறட்சியின் பிடியில் தாண்டவமாடும்.
தென் தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களின் வறட்சிக்கு இந்த மரங்களே முக்கிய காரணம் என்பது அதிர்ச்சியான ஒன்றுதான். ஆனால் இதை அறியாமல் அந்த மக்கள், இன்னும் புதிதாக மரங்களை வளர்த்து பராமரிக்கிறார்கள் என்று என்னும் போது அறியாமையை குறித்து வருந்த வேண்டி இருக்கிறது.

உடம்பு முழுதும் விஷம்
இந்த மரத்தின் இலை, காய், விதை என எதுவுமே எந்த உயிரினத்துக்கும் பயன்படாது. முக்கியமான விஷயம் ஒன்றும் உள்ளது, ஆச்சரியமாக இருந்தாலும் உண்மை அதுதான். இந்த மரத்தில் கால்நடைகளை கட்டி வைத்து வளர்த்தால் அவை மலடாகிவிடும், அதாவது சினைபிடிக்காமலேயே போய்விடும், ஒருவேளை மீறி கன்று ஈன்றாலுமே அது ஊனத்துடன்தான் பிறக்கும்….?!!
ஒருபுறம் இதன் வேர் நிலத்தடி நீரை விஷமாக மாற்றிவிடுகிறது மற்றொரு புறம் இதன் நிழலில் மற்ற உயிரினங்கள் வாழ முடியாத நிலை இருக்கிறது. இதன் பக்கத்தில் வேறு எந்த செடியும் வளராது, தவிர மரத்தில் எந்த பறவை இனங்களும் கூடுகட்டுவதும் இல்லை. காரணம் என்னவென்றால் இந்த வேலிகாத்தான் மரங்கள், உயிரிவளி (Oxygen) மிக குறைந்த அளவே உற்பத்தி செய்கிறது, ஆனால் கரிமிலவாயுவை மிக அதிக அளவில் உற்பத்தி செய்து வெளியிடுவதால் சுற்றுப்புற காற்று மண்டலமே நச்சுதன்மையாக மாறிவிடுகிறது .

அறியாமை
நமக்கு தெரியாமலேயே இப்படிப்பட்ட மரங்களை கண்டுகொள்ளாமல் இருக்கிறோம் என்பது வருத்தத்துக்கு உரியதுதான்.

கேரளாவின் விழிப்புணர்வு
நமது அண்டை மாநிலமான கேரளாவில் இந்த மரத்தை பற்றிய விழிப்புணர்வை வனத்துறையினர் மக்களிடம் ஏற்படுத்தி உள்ளனர்…..!! அதனால் கேரளாவில் இந்த மரத்தை ஒரு இடத்தில் கூட காண முடியாது. ஆனால் நம் தமிழ்நாட்டில் விறகிற்காக இந்த மரத்தை வளர்த்து வருகின்றனர்….??!

என்ன முரண்பாடு…?? என்ன அறியாமை..??
ஆராய்ச்சியாளர்களும், இந்த மரங்கள் இருக்கும் இடங்களில் வாழும் மனிதர்களின் மனதையும் இந்த மரம் மாற்றி வன்முறை எண்ணத்தை கொடுக்கும் என்று கண்டு பிடித்து உள்ளனர்.

நல்ல மரம் ஆரோக்கியம்
வேப்பமரம் வளர்ப்பது எவ்வளவு நல்லது என்பதை யாவரும் அறிவோம், மற்றும் ஆலமரமும் , அரசமரமும் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது என்பதை உணர்ந்தவர்கள் நாம். இருந்தும் இந்த முள் மரத்தை பற்றி சரியாக விழிப்புணர்ச்சி நம்மிடம் இல்லையே என்பதே என் ஆதங்கம். சுற்றுபுறத்தில் புல், பூண்டை கூட வளரவிடாமல் தடுக்கும் இந்த முள் மரத்தை பூண்டோடு அழிக்கவேண்டும் என்ற விழிப்புணர்வை அரசாங்கம் தீவிர முயற்சி எடுத்து மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் . சமூக ஆர்வலர்கள் இந்த மரத்தை பற்றிய பிரசாரங்களை செயல் படுத்தலாம், செய்வார்களா?

இந்த பதிவை படிப்பவர்களும் முடிந்தவரை இந்த செய்தியை மற்றவர்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் ஒரு சிறிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.

மரங்களை வளர்ப்பது எவ்வளவு அவசியமோ அதை விட இந்த மரத்தில் ஒன்றையாவது வெட்டி அழிப்பது அதை விட அவசியம்….

இந்த மரத்தை வெட்டி வீழ்த்துவோம்…..! நம் மண்ணின் மாண்பை காப்போம்..!!

இது ஒரு அபத்தமான கல்விமுறை: கல்வி திட்ட அதிகாரி-02-02-2012

சேலம்: இதுவரைக்கும், நம் கல்விமுறை, மாணவ, மாணவியருக்கு சரியான உற்று நோக்கலை தரவில்லை.

பனைமரத்தில் ஆண், பெண் என, இரு பிரிவு உண்டு என்பதையும், அதை எப்படி அடையாளம் காண்பது என்பதையும், மாணவர்களுக்கு கற்றுத் தரவில்லை. ஆனால், அதற்கு பதில் பனைமரத்துக்கான பொட்டானிக்கல் பெயர்களை அறிமுகப்படுத்தியுள்ளோம் என, அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்ட இணை இயக்குனர் கார்மேகம் பேசினார்.

அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தின் சார்பில், மாநில அளவில் அறிவியல் ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம், சேலம் ஜெய்ராம் கல்லூரியில் நடந்தது.

இதில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்ட இணை இயக்குனர் கார்மேகம் பேசியதாவது:

இங்கு ஒரு தடவை சிறப்புத் தமிழ் பாடத்தை எடுத்துவிட்டால், கடைசி வரை தமிழைப் படித்துதான் சாக வேண்டும்; அப்புறம் மாற்றிக் கொள்ளவே முடியாது. இந்த நிலையெல்லாம் உடனடியாக மாறாது.

மேல்நிலைக் கல்வியில் மாணவர் விரும்பிய குரூப் கொடுப்பதற்கும், 10ம் வகுப்பு மதிப்பெண்ணே அடிப்படையாக உள்ளது. இதனால் மாணவனுக்கு பிடித்த பாடம் ஒன்றாகவும், நாம் வழங்கும் பாடம் ஒன்றாகவும் உள்ளது. 450 மதிப்பெண் எடுத்தவர்கள் தமிழ் இலக்கியம் படிக்க விரும்பலாம். 250 மதிப்பெண் எடுத்தவர்கள் கணிதப் பாடத்தையும் விரும்பலாம்.

ஆனால், இதற்கெல்லாம், நமது தேர்வுக் குழு அனுமதிப்பதில்லை. இங்கு ஒரு தடவை சிறப்பு தமிழ் பாடத்தை எடுத்துவிட்டால், கடைசி வரை தமிழைப் படித்துதான் சாக வேண்டும்; அப்புறம் மாற்றிக் கொள்ளவே முடியாது. இந்த நிலையெல்லாம் உடனடியாக மாறாது. எட்டாம் வகுப்பு வரை ஆல் பாஸ் போடுவதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். என்னைக் கேட்டால், பி.எச்டி., வரை ஆல் பாஸ் போட வேண்டும் என்பேன். கல்வி ஒரு அனுபவமாக இருக்க வேண்டும். ஒரு கப்பலில் பயணித்தால், அதில் உள்ள அனைவரும் அடுத்த கரைக்கு செல்ல வேண்டும். அதில் சிலரை நடுவில் தூக்கி எறிவது, எந்த விதத்திலும் நியாயமாகாது.

இன்று நாட்டில் மிகப்பெரிய அதிகார சக்தியாக விளங்குவது அரசியல். அதற்கு அடுத்து, பணபலம் மிக்கவர்களாக தொழிலதிபர்கள். இந்த இரண்டிலும் இருப்பவர்கள், நம்மிடம் நல்ல மதிப்பெண் பெற்றவர்களா? நல்ல மதிப்பெண்ணுக்கும் வாழ்க்கைக்கும் சம்பந்தமில்லை. நமது கல்வி முறையிலும் மாபெரும் பிரச்னைகள் உள்ளன. பத்தாம் வகுப்பில் மாணவனை, படி,படி என விரட்டிவிட்டு, 11ல் ப்ரீயாக விட்டு விடுகிறோம்.

மீண்டும், 12ம் வகுப்பில் விரட்டுகிறோம். அதேபோல், பிளஸ் 2 பாடம், ஒரு கல்வியாண்டுக்காக, அதாவது ஜூனில் ஆரம்பித்து, மார்ச் வரை நடத்த தயாரிக்கப்பட்டது. பத்து மாதத்துக்கு புத்தகம் எழுத வேண்டியது. பின் அதை, ஆறு மாதத்துக்குள் நடத்தி முடிக்க வேண்டியது; அதையும் அபிஷியலாகவே முடிக்கிறோம், அதுதான் வேடிக்கை. நீதிமன்றத்தில் கேள்வி கேட்டால் பதில் சொல்ல முடியுமா? எவ்வளவு பைத்தியக்காரத்தனம் பாருங்கள். இதையெல்லாம் மாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதில், நூற்றுக்கும் மேற்பட்ட அறிவியல் ஆசிரியர்கள், தமிழகம் முழுவதும் இருந்து கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை, சேலம் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்ட அலுவலர்கள் செய்திருந்தனர்.

அமில நதியில் சில தாமரைப் பூக்கள்-மைத்ரேயி


சில வாரங்களுக்குமுன் பாகிஸ்தானில் தகவல்துறை அமைச்சராய் இருந்த பிர்தௌஸ், அழுதுகொண்டே தொலைக்காட்சியின் நேரடி ஒளிபரப்பில் தன் ராஜினாமா கடிதத்தை வழங்கினார். ஆனால், சர்வதேச அளவில் இந்தக் கண்ணீர் ராஜினாமா எந்த சலசலப்பையும் ஏற்படுத்தவில்லை. பாகிஸ்தான் போன்ற நாடுகளில் பெண்களின் அரசியல் ஈடுபாடு என்பது பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனால், அது உருக்குலைந்த கனவாய் ஆகும் போதும் எந்த எதிர்வினையும் இல்லாது போவது பெரும் கவலையை ஏற்படுத்தும் விஷயமாக உள்ளது.

இந்திய அரசியலிலும் பெண்களின் பங்கு எப்போதுமே கவலைக்கோ, விமர்சனத்திற்கோ காரணமாக இருந்திருக்கிறது. மாயாவதி முதல் ஜெயலலிதா வரை அவர்களின் அணுகுமுறை மிக இறுக்கமாக, அதிகாரக் கட்டமைப்பு சார்ந்ததாகவே இருக்கிறது. அதை விமர்சனம் செய்கிறவர்கள் பலர். ஆனால், அவர்களுக்கு ஏன் அத்தகைய மனநிலை என்று சிலரேனும் யோசித்திருக்கிறார்களா என்று தெரியவில்லை.

மாயாவதி ஆகட்டும் ஜெயலலிதா ஆகட்டும் இவர்கள் அப்படி இல்லாவிட்டால் என்ன ஆகும் எங்கிற ஒற்றைக் கேள்வியைக் கேட்டுப் பாருங்கள். பிர்தௌசின் கண்ணீர் ராஜினாமா மாதிரி இவர்களும் செய்ய நேரிட்டிருக்கலாம்.

பிர்தௌஸ் சிறப்பாக செயலாற்றவில்லை என்பதே அவர் மேல் கேபினட் அமைச்சர்கள்வைத்த குற்றச்சாட்டு. பெண்கள் திறனற்றவர்கள் என்பது ஒரு பொதுப்புத்தியின் வெளிப்பாடாக இருக்கிறது. உங்களுக்குத் தெரியாது  என்னும் மனோபாவத்திலேயே பெண்களைக் கையாளுவது அவர்கள் மனபலத்தைப் பாதிக்கும் செயல்.அப்படியொரு மன அழுத்தம் நடுவே பல நாள் புழங்கியதன் வெளிப்பாடே பிர்தௌசின் கண்ணீர். அமைச்சரின் நிலை மட்டுமல்ல, அன்றாடம் வேலைக்குப் போகும் பெண்களின் கதையும் அதுதான். பெரும்பாலான அலுவலக நிர்வாகங்கள், பெண் ஊழியர்களின் மனநிலையைக் கணக்கிலெடுத்துக் கொள்வதில்லை.

சமீபத்தில் ஜெய்ப்பூர் இந்திய ராணுவப் பள்ளியின் தலமையாசிரியராய் இருக்கும் ராஜீவ் குமார் சிங், அங்கு பணியாற்றிய ஒரு பெண் மீது பாலியல் வன்முறை நிகழ்த்தியபோது ராஜீவுக்கு எதிராய் சாட்சிகள் இருந்தும் அவரைப் பணி நீக்கம் செய்யவில்லை. மாறாக, அந்தப் பெண்ணை பணிநீக்கம் செய்யப்பட்டார். இப்போது அந்தப் பெண், பாதுகாப்பு அமைச்சர் அந்தோணியிடம் புகார் செய்திருக்கிறார்.

இதில் திகைப்பூட்டும் விஷயம், புகாரை வாபஸ் வாங்க ராணுவ அதிகாரிகள் லஞ்சம் தர முன் வந்ததுதான். அதை ஏற்க முன் வராததால், விசாரணையின்போது அந்தப் பெண்ணை அவர்கள் விசாரிக்கும் முறையில் அவர் தனிமைப்படுத்தப்பட்டு அழுத சம்பவங்களும் நிகழ்ந்திருக்கின்றன. பகிரங்கப்படுத்தப்படாத அதன் முடிவில் வழிந்த அந்தக் கண்ணீரின் சாட்சி போதும்,  விசாரணையில் எத்தனை முறை வார்த்தைகளால் பாலியல் வன்முறை நிகழ்ந்திருக்கிறது என்பது.

ஒரு நாளின் பரபரப்பான காலை நேரத்தில், பரபரப்பாய் வேலைக்குப் போகும் பெண்களின் எண்ணிக்கை எண்ணிடலடங்காதவை.அவர்களில் பலர், பெரிய பதவிகளில் உள்ளவர்களாகவும் இருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு இந்த சமூகம் அளித்திருக்கும் மரியாதை இன்னும் கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. இவர்களை பெண் என்னும் பிம்பம் மீறி, மனுஷியாய் பார்க்கும் பார்வை மிகக் குறைவானதாகவே இருக்கிறது.

சாதாரணமாக அலுவலகங்களில் நான்கு ஆண்கள் சேர்ந்து பேசினால், அதில் பெண்களைப் பற்றின பேச்சு இல்லாமல் இருக்காது, அப்போது சகஜமாக ஃபிகர், சப்பை ஃபிகர், ஐட்டம் மாதிரியான வார்த்தைகள் புழங்கும் (இதில் வேறுபடும் ஆண்களும் உள்ளார்கள்). இந்த ஆண்களுக்கு மத்தியில் வேலை பார்ப்பதென்பது பெண்களுக்கு மிகுந்த வலி நிறைந்த ஒரு விஷயம்.

ஒரு பெண்ணிற்கு உயர் பதவி கிடைத்து விட்டால், அதைப் பெறத் தவறிய ஆணின் வாயில் வரும் முதல் வார்த்தை : எப்படி இவளுக்கெல்லாம் கிடைக்குனு தெரியாது? போகிற போக்கில் இறைத்து விட்டுப் போகும் அமிலம் தாண்டி, பெண்கள் சாதிக்க வேண்டியிருக்கிறது.

அமெரிக்காவில் சமீபத்தில் நடத்திய ஆய்வொன்றில், அலுவலகப் பிரச்சினைகளைப் பெண்களில் இருபது சதவிகிதத்தினர் வெளியே சொல்வதில்லை என்று கணக்கிடப் பட்டிருக்கிறது. பெண்களின் மனவெளியைப் பற்றி அதிகம் அக்கறை இல்லாத இந்தியாவில் இந்தக் கணக்கெடுப்பு நிகழ்த்தப் படுமானால், அலுவலக மனக் கசப்புகளை வெளியேசொல்லாத பெண்கள், எண்பது சதவிகிதத்துக்கு மேலிருப்பார்கள்.

ஒவ்வொரு அலுவலகத்திலும் பெண்களின் புகார்களை விசாரிக்க ஒரு குழு இருக்க வேண்டும் என்பது இந்தியப் பெண்கள் ஆணையம் வலியுறுத்தும் விஷயம். இப்படி ஒரு குழு இருக்க வேண்டும் என்பது உச்சநீதிமன்றத்தின் பரிந்துரையும் கூட. அப்படி இங்கு எந்த அலுவலகத்தில் இருக்கிறது? ஒரு முறை எனக்கு அதிகாரியாய் இருந்த ஒருவன், கடக்கும் போதெல்லாம் அசிங்கமாய்ப் பேச, அவனை எதிர்த்து தலைமை அலுவலகத்தில் புகார் செய்தேன். தலைமை அதிகாரியை உடனடியாக சென்னையில் சந்தித்து, சரக்கு வாங்கிக் கொடுத்து அந்தப் புகாரை விசாரிக்காமலே செய்து விட்டான்.

பெண்களை இப்போதெல்லாம் நிறைய கம்பெனிகளில் வேலை செய்ய தேர்ந்தெடுப்பதற்கு காரணம், அவர்கள் வேலை நேரத்தில் சிகரெட் பிடிக்கவோ, டீ சாப்பிடவோ அதிகம் வெளியே போக மாட்டார்கள் என்பதால் என்று, ஒரு டீக்கடையில் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டேன், அவர்களின் பேச்சு ஒட்டுமொத்தமாய் பெண்களின் திறனை புறக்கணித்தது.

வெறும் பொருளாதாரத் தேவைக்காக மட்டுமின்றி, தன் திறன் மீதான நம்பிக்கையின் பொருட்டும் பெண்கள் தங்களை பணி செய்யும் இடத்தில் நிலைநிறுத்தினால் மட்டுமே அவர்கள், அவர்களாகவே இருத்தல் இயலும். தன்னை சாய்த்து விடும் ஆண்கள் குறித்த மன அழுத்தமற்று இருத்தலும் அப்போதே சாத்தியப்படும்.

(ஓடும்)

காக்கை குருவி நமது சாதி -பிரபஞ்சன்



கண்ணாடிப் பாத்திரம் தரையில் விழுந்தது போல உடைந்து சிதறிக் கிடக்கிறது, புதுச்சேரி. கடந்த அறுபது எழுபது ஆண்டுகளுக்குள் பிறந்து வாழ்ந்த தலைமுறையினர்க்கும் புயல் இப்படியும் இருக்கும் என்று புதிய போதனையை நிகழ்த்தி இருக்கிறது, இந்தப் புத்தாண்டு கொண்டு வந்து போட்டிருக்கிற புயல். மழையை நாங்கள் நிறைய பார்த்திருக்கிறோம். ஆனால், சிறிய பெரிய வலிய காற்றுகளை நாங்கள் புயல்கள் என்று கொஞ்சம் அசிரத்தையாகவும் ஏன் அலட்சியமாகக்கூட நினைத்துக் கொண்டிருந்தோம். மண்ணின் மேல் உள்ள எதையும் புயல் புரட்டிப் போடும் என்று நேரில் இப்போதுதான் கண்டோம். காரிலோ, இரு சக்கர வாகனங்களிலோ புதுச்சேரியைச் சுற்றிப் புயலின் வந்து போன சுவடுகளைச் சுற்றிப் பார்க்க முயன்று நானும் நண்பர்களும் தோற்றுத்தான் போனோம். தெருவின் குறுக்காக, வீடுகளுக்கு முன்னும் பின்னும், வீடுகளின் மேலேயும் விழுந்து கிடந்தன மரங்கள். ஊரைச் சுற்றி நடக்கத்தான் முடிந்தது. கூரை வேய்ந்த வீடுகள் அனைத்தும் தலை இழந்து நிற்கின்றன. மண் சுவர்கள் இற்றுச் சரிந்து கிடக்கின்றன. வலிவான கல் கான்கிரீட் வீடுகள் மட்டுமே பிழைத்துக் கிடக்கின்றன. மக்கள் திகிலில் உறைந்திருந்தார்கள். மின்சாரம் சுத்தமாக இல்லை. ஆதி அனாதி கால இருட்டை, இருட்டு என்ன என்பதைப் புதுச்சேரி மக்கள் மூன்று இரவுகள் கண்டுணர்ந்தார்கள். தெருவோரம் பிளாட்பாரங்களிலேயே பல தலைமுறைகளாகக் குடும்பம் நடத்தியவர்கள் படும் துன்பம் அளவற்றது. புயல் சத்தம் என்ன என்பதை முதல் முறையாக நான் கேட்டேன். பல ஆயிரம் குழந்தைகள் ஏக காலத்தில் துடித்துப் போட்ட சத்தம் மாதிரிப் புயல் ஓலமிட்டது. மரண ஓலம் இதுவென்றே நினைத்தேன்.

காலூன்ற காய்ந்த தரை, நான்கு நாட்களுக்குப் பிறகே கிடைத்தது. புதுச்சேரி, மிக மோசமான சுற்றுச்சூழல் ஓம்பப்படும் நகரமாக இருந்தாலும் மரங்கள் அடர்ந்தே இருந்தன. அவை வெட்ட வெளியானது மட்டுமல்ல, செத்து விழுந்த கிடந்த காக்கைகளையும் இன்னும் சில பறவைகளையும் கண்டு பதைபதைத்துப் போனேன். தெரு நாய்களும் பூனைகளும் கூட செத்துக் கிடந்தன. தெரு முழுக்க இலைகள், தழைகள் சிந்திக் கிடக்கின்றன. எல்லாவற்றையும் விடவும் மோசமான நிலைமை, மக்கள் அச்சம் கொண்டு உலவுகிறார்கள். அச்சமற்ற தன்மைதான் விடுதலை என்கிறார் நீட்ஷே. எங்கள் விடுதலையை நான்கு நாட்கள் நாங்கள் இழந்து கிடந்தோம். இப்போதும் ஏழைகளே பெரும் துயர் அடைந்தார்கள்.

ங்கள் வீட்டு வாசலில் நிறைய தவளைகள் சேர்ந்துவிட்டன. உள்ளே செய்வதறியாது நான் முடங்கிக் கிடந்த வேளை. ஓட்டல்கள் திறக்கப்படவில்லை. உணவை, உறவினர்களிடம் இருந்து எதிர்பார்த்துக் கிடந்தேன். என் மனைவி காலமான பிறகு, என் உணவுத் தேவை விடுதிகளை நம்பியே இருக்கிறது. வெளியே மழை காய்ந்த மண் தேடித் தவளைகள் பரிதவிக்கின்றன. என் மனம் தவளைகளால் நிரம்பிக் கிடக்கிறது. தண்ணீரிலும் தரையிலும் வாழ்பவை தவளைகள். நம்மைப்போலத்தான். சொர்க்கத்திலும் நரகத்திலும் வாழ்வது மாதிரி. எது சொர்க்கம் என்பதில்தான் குழப்பம். புயல் மழைக் காலங்களில்தான் நமக்கு ஞானரதம் வாய்க்கிறது (பாரதி கூட எங்கள் ஊரில் இருந்துகொண்டுதான் ஞானரதம் எழுதி இருக்கிறார்).

டோக்கியோவைக் காப்பாற்றிய தவளை என்று ஒரு கதை. ஜப்பானிய இலக்கியத்தில் சிறந்த எழுத்தாளராகக் கருதப்படும் ஹாருகி முரகாமி எழுதிய கதை. தன் காலத்தின் ஆன்மிக வறட்சியை எழுதிக் காட்டிய எழுத்தாளர் அவர். (ஜி.குப்புசாமி தொகுத்து, செழியன் மொழி பெயர்த்த கதை. வம்சி வெளியீடு).

தனியார் வங்கி ஒன்றின் கடன் வசூலிப்பாளர் கட்டாகிரி, அவர் அறையில் பெரிய தவளை ஒன்று உட்கார்ந்திருப்பதைப் பார்க்கிறார். அவர் திகைக்கிறார். டோக்கியோவை ஒரு பூகம்பம் தாக்க இருக்கிறது. பிப்ரவரி 18ம் தேதி. அதை ஏற்படுத்த இருப்பது ஒரு ராட்சஸப் புழு. அது, கட்டாகிரி வேலை பார்க்கும் அலுவலகத்துக்குக் கீழே தரைப்பகுதியில் பதுங்கி இருக்கிறது. அந்தப் புழுவை அழிக்கத் தவளை புறப்பட்டு இருக்கிறது. சமூக நலன் கருதி. கட்டாகிரி, இந்த யுத்தத்தின்போது, தவளைக்கு ஆன்மிகத் துணை இருக்கவேண்டும் என்று கேட்கவே தவளை வந்திருக்கிறது. தனக்குக் கராத்தே தெரியாதே என்கிறார் கட்டாகிரி. அதனால் என்ன, நீதிமான்கள் மனசால் ஒன்றை நினைத்து – அவர்கள் நல்லதையே நினைப்பார்கள். – உதவி செய்தால் போதும் என்கிறது தவளை. அவருடைய பெருந்தன்மையும் தியாகமும் கவனிக்கப்படாத, அங்கீகரிக்கப்படாத சமுதாயத்தில் அல்லவா வாழ்கிறார் அவர். அந்த வீரம் செறிந்த யுத்தத்துக்கு ஒப்புக் கொள்கிறார். டோக்கியோவைக் காப்பாற்ற வேண்டாமா என்ன? யுத்தம் நடக்க இருந்த இரவுக்கு முந்தைய மாலை, கட்டாகிரி மயக்கம் அடைந்து தெருவில் விழுந்து விடுகிறார். அவரை மருத்துவமனையில் கொண்டு சேர்க்கிறார்கள். மறுநாள் மருத்துவமனை அறைக்கே வந்து சேர்கிறது தவளை. உடம்பெல்லாம் வெட்டுக்காயம். கடைசியில் தன்னந்தனியாகவே தவளை அந்தப் பூகம்பப் புழுவைக் கொன்று விட்டதாகச் சொல்கிறது. ‘பியோதர் தஸ்தயேவ்ஸ்கி இணையில்லாத கருணையுடன், கடவுளால் கைவிடப்படுவோர் யார் என்கிற சித்திரத்தைத் தருகிறார். மனிதன் கடவுளைக் கண்டறிந்தான். அதே கடவுளால் கைவிடப்பட்டான். இங்குதான் அரிய மதிப்புள்ள மனித வாழ்வின் வலி மிகுந்த முரண்கள் இருக்கின்றன என்று அவர் கண்டறிந்தார். புழுவுடன் இருளில் சண்டையிடும்போது நான்   தஸ்தயேவ்ஸ்கியின் ‘வெண்ணிற இரவுகளை’ எனக்கு நானே ஞாபகப்படுத்திக் கொண்டேன்’ என்கிறது கற்றறிந்த மேன்மைமிகு சிந்தையாளராகிய தவளை. தவளைக்கு உறக்கம் வருகிறது. உறக்கத்திலேயே அது செத்தும் போகிறது…

கட்டாகிரி இருந்த அறையில் வெளிச்சம் ஏற்றப்படுகிறது. நர்ஸ் அவரிடம் ‘மீண்டும் கனவா?’ என்கிறாள்.

‘ஆனால் அது தன் வாழ்க்கையே விலையாகக் கொடுத்துவிட்டது. அது போய்விட்டது. அது களிமண்ணுக்குள்ளேயே போய்விட்டதென்று நான் நினைக்கிறேன்.’

கட்டாகிரி, கனவுக்கும் நிஜத்துக்கும் உள்ள வித்தியாசத்தை உணர முடியாமல் இருந்தார். ‘நீங்கள் கண்ணால் பார்ப்பதெல்லாம் நிஜமாக இருக்கவேண்டுமென்ற அவசியம் இல்லை.’ அவர் தனக்குத்தானே சத்தமாகச் சொல்லிக் கொண்டார்.

செவிலி சிரித்துக்கொண்டே அவரது நெற்றியிலிருந்த வியர்வையைத் துடைத்தாள். ‘தவளை மேல் உங்களுக்கு ரொம்பப் பிரியம். இல்லையா மிஸ்டர் கட்டாகிரி?’ என்றாள்.

மழை விட்டிருந்தது. இல்லை. அப்படித் தோன்றியது. தெருவில் ஒன்றிரண்டு தேநீர்க் கடைகள் திறந்திருந்தன. முன்னிருட்டு. பசித்தது.வானொலிக்கு முன் மக்கள் குழுமி நின்றுகொண்டு செய்திகள் கேட்டுக் கொண்டிருந்தார்கள். டீக்கடை வாசலில் ஒரு பிச்சைக்காரக் கிழவி நடுங்கியபடி நின்று கொண்டிருந்தாள். இரண்டு பிஸ்கெட் பாக்கெட்டுகள் வாங்கிக்கொண்டு, தேநீர் குடித்துப் பசியைத் தணித்தேன்.டீக்கடைக் கோணிச் சாக்கு மறைவுக்குப்பின் ஒரு குழந்தை அழுது கொண்டிருந்தது. மழை மீண்டும் தொடங்கியது. அத்துடன் காற்றும். பலமான காற்று. இன்னும் ஒரு நாள் மழை நீடிக்கும் என்றது வானொலி.

வீடு திரும்பினேன். இரவு முழுக்கக் குரைத்து, எங்கள் அப்துல்கலாம் நகர்  நாயொன்று நடுங்கிக்கொண்டு நாங்கள் சைக்கிள் நிறுத்தும் இடத்தில் முடங்கிக் கிடந்தது. பிஸ்கெட் பாக்கெட்டில் பெரும்பகுதி நானும், மற்றதை நாயும் பகிர்ந்துகொண்டோம். தொடர்ந்து மனிதர் அல்லாதவர் தொடர்பான நினைவுகளாகவே வந்து கொண்டிருந்தன.  மழைக்குமுன் சுறுசுறுப்பாக அலைந்த எறும்புகள் இப்போது எங்கே போயிருக்கும். என்னவாகி இருக்கும். பேருந்து நிறுத்தத்தின் கீழே படுத்துக்கொண்டு ஒரு முற்றும் துறந்த ஞானியைப் போன்ற முகத் தோற்றத்துடன் அசை போட்டுக் கொண்டிருக்கும் திருவல்லிக்கேணி மாடுகள் என்ன செய்துகொண்டிருக்கும் புயல் மழையின்போது? குரங்காட்டிகளுக்குச் சோறு போடும் குரங்குகள், ஆறடி மனிதருக்குச் சம்பாதித்துக் கொடுக்கும் ஜோசியம் சொல்லும் கிளிகள்; மாதுளை மரத்துச் சிட்டுக் குருவிகள், எப்போதும் எங்கள் வீட்டுக் குழந்தைகளிடம் திருடி இராத காக்கைகள், இவைகள் எல்லாம் எங்கே எப்படி இருக்கின்றன?

கம்பனின் முயல் பற்றிய பாடல் ஒன்று நினைவுக்கு வந்தது. மந்தரை, கைகேயியின் மனதைக் கெடுக்கிற சூழல். தசரதனுக்குப் பிறகு, பரதனைப் பட்டமேற்கச் செய்யவேண்டும் என்கிறாள் மந்தரை. கைகேயி, பரதனைக் காட்டிலும் அதிகமாக ராமனை நேசிக்கிற தாய். கைகேயி, மந்தரையிடம் சொல்கிறாள்:

வெயில் முறைக் குலக்கதிரவன் முதலிய மேலோர்

உயிர் முதல் பொருள் திறம்பினும் உளர திறம்பதோர்

மயில் முறைக் குலத்து உரிமையை மனு முதல் மரபைச்

செயிர் உற புலைச் சிந்தையால் என் சொனாய் தீயோய்…

(மந்தரை சூழ்ச்சிப்படலம் – 64.)

இதன் அர்த்தம்:

‘சூரிய குலத்துதித்த  மேலோர்கள், உயிரே போனாலும், நீதி உரை தவறாதவர்கள். இது மயில் முறை போல, உரிமை சார்ந்த விஷயம். மனுக்குலம் குற்றத்தால் தாழ்மையடையும்படி புன்மைக் குணமுள்ளவளே, என்ன சொன்னாய்?’ இது கைகேயி, மந்தரையிடம் வெகுண்டு சொன்னது. மூத்தவனுக்கே பட்டம் உரியது என்பதே முறை. இது மயில் முறை போன்றது என்று கைகேயி சொன்னதுக்கு என்ன அர்த்தம். பலரும் பல விளக்கங்களைச் சொல்கிறார்கள். பின்னால் வந்த தணிகைப் புராண ஆசிரியர் கச்சியப்ப முனிவர் விளக்கம் சொல்லி இருக்கிறார். மயில் குலத்துக்கே உரிய ஒரு தனித்தன்மை என்னவென்றால், மயில் முட்டை இட்டுக் குஞ்சு பொரிக்கும்போது, முதலில் பொரித்த குஞ்சின் கலாபத்துப் பீலி பொன்னிறம் படர்ந்திருக்கும். மற்ற குஞ்சுகளுக்குப் படராது. பீலி பொன்னிறம் வாய்ந்த மயிலே அக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கும் என்பது கச்சியப்ப முனிவரின் பாடல் பொருள். பாடல் வரிகள் இவை:

‘பலவாம் பொழிலின் ஒரு தாய் உயிர்த்த பல மயிற்கும்

கலவாம் புனைந்த களிமயில் மூத்ததெனக் கருதச்…’

பீலி பொன்னிறம் வாய்க்கப் பெற்ற மயில் ஆடத் தொடங்கிய பின்னால்தான் ஏனைய மயில்கள் ஆடத் துவங்கும் என்ற குறிப்பினையும் முனிவர் தருகிறார்.

(பறவை இயல் அறிஞர்கள் இது பற்றி அறிவியல் செய்திகள் வைத்திருக்கிறார்களா என்று எழுதினால் நாமும் அறிந்துகொள்ளலாம்) படிக்கப் படிக்க விஷயம் தெரிகிறதோஇல்லையோ, நம் அறியாமை தெரிகிறது, அல்லவா. மழைக் காலம், அறியாமை மறையும் காலம். இரவு கொஞ்சம் கம்பன் படித்தேன். இரு மெழுகுவர்த்திகள் வெளிச்சம் இருக்கும்வரை.

மறுநாள் வானம் வெளிவாங்கி இருந்தது. புயல் குழந்தைபோல ஆகிவிட்டிருந்தது. வெயில் வரலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தது. தெருவில் குப்பை லாரிகள். மேலே மேலே அடுக்கப்பட்ட குப்பை, லாரியிலிருந்து வழிந்து கொண்டிருந்தது. ஆங்காங்கே ஆட்டோக்கள் காணப்பட்டன. குழந்தைகளுக்குப் பள்ளிக்கூடம் விடுமுறை. எப்போதும் விடுமுறை என்றால்தான் குழந்தைகள் முழு மகிழ்ச்சியடைவார்கள். காபி சாப்பிட்டுப் பக்கத்துப் பெட்டிக்கடையில் பேப்பர் வாங்குகையில் நண்பர் அரசியல் பேசினார். அம்மாள் ஆட்சி வந்தால் வானம் ஏகத்துக்குத் திறந்துவிடுகிறதாம். தமிழ்நாட்டுக்கு அது பொருந்தும் ஓய்! ‘நம் நாட்டை ஆள்வது ரங்கசாமிதானே?’ என்றேன். ‘மந்திரிகள் பத்தாம் கிளாஸ் பரீட்சை எழுதினால் புயல் வரும்’ என்றார். ‘எழுதினால்தானே?’ என்றேன்.

ண்பர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய முயல் கதை நினைவுக்கு வருகிறது. ஒரு சோம்பேறித்தனமான மதிய வேளை. எஸ். ரா. வீட்டுக் கதவு தட்டப்படுகிறது. திறக்கிறார். ஒரு முயல். ‘உங்களுடன் பேச வந்திருக்கிறேன்’என்கிறது முயல். இருவரும் நாற்காலியில் அமர்ந்து பேசுகிறார்கள். ‘நீங்கள் ஈசாப்பின் முயல், ஆமை கதையைப் படித்திருக்கிறீர்களா?’ ‘நான் பள்ளிப் பருவத்திலேயே அதைப் படித்திருக்கிறேன்’ ‘பிறகு ஏன் அதைப் பற்றி எழுதவில்லை. ஒரு முயல் தூங்குகிறபோது, ஓர் ஆமை வெற்றி பெறுவது என்கிற கதை எங்கள் இனத்தை அவமானப்படுத்துகிறதே’ என்று உணர்ச்சியோடு சொல்லித் தொடர்கிறது. இரண்டாயிரத்து ஐநூறு வருஷத்துக்கு முந்தைய ஒரு குரங்கு, எங்கள் வம்சத்து முயலிடம், கேவலம் ஆமையிடம் பந்தயத்தில் தோற்றுவிட்டவர்கள்தானே நீங்கள் என்று சொல்லி எங்கள் முயல் குலத்தையே கேவலப்படுத்திவிட்டது. அந்தக் களங்கத்தைப் போக்க நான் புறப்பட்டு இருக்கிறேன். ஈசாப்பிடம் சென்று நியாயம் கேட்டேன். வேண்டுமானால் மீண்டும் ஒரு பந்தயம் நடத்துங்கள் என்றேன். கதையை மாற்றி எழுதச் சொன்னேன். அது ஓர் உருவகம் என்றார். நான் மறுகதை எழுத அவகாசம் கேட்டார். அதற்குள் ஈசாப் இறந்துபோனார். கிரேக்கத்தின் கவிகள், நாடகாசிரியர்கள் அனைவரையும் எங்கள் இன முயல்கள் சென்று புதுக்கதைக் கோரிக்கை விடுத்தன. போர்ஹேயையும் பார்த்தோம். அவர் அக்கதை ஒரு கணிதப் புதிர் என்றார். போர்ஹேவும் இறந்துபோனார். எங்களுக்காக யார் ஒரு புதுக்கதையை எழுதப் போகிறார்கள்? யாரை வைத்து மாற்றுக் கதை எழுதலாம்?’ என்று கேட்டபடியே முயல், எஸ். ராமகிருஷ்ணனுக்குப் பரிசாக ஒரு பழத்தைக் கொடுத்துவிட்டுப் பேருந்து நிலையம் நோக்கிச் சென்றது…

ங்கள் ஊரில் பாரதி தங்கி இருந்தபோது பெரும்புயல் ஒன்று அநேகமாக 1916ம் ஆண்டு வீசியது. இது தொடர்பாக அவரது கவிதைகள்- வசனங்கள் உங்களுக்கு நினைவு வர வேண்டும். இது பற்றி ஒரு கதை வழங்குகிறது. இதன் உண்மைத் தன்மை பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், இது நடந்திருக்கும் என்று நான் நம்புகிறேன்.பேசியும் எழுதியும் வருகிறேன்.

சுமார் பத்து நாட்களுக்குப் பிறகு சூரியனை மக்கள் பார்த்தார்கள். பெரும் சேதம். காடெல்லாம் விறகாச்சு. அரவிந்தர், மண்டயம் ஆச்சாரியார், வ.ரா. எல்லோரும் அரிசி, பருப்பு தண்டி மக்களுக்கு உணவுப் பொட்டலம் வழங்கிக்கொண்டு சென்றார்கள். பாரதியும் ஐயரும் (வ.வெ.சு. ஐயர்) ஒரு பெரிய கூடையை எடுத்துக்கொண்டு தெருவில் விழுந்து கிடக்கும் செத்த பறவைகளைத் திரட்டி எடுத்துச் சென்று மனிதர்களை அடக்கம் செய்வது போல அடக்கம் செய்தார்கள்.

பாரதி இப்படிச் செய்திருப்பார் என்று நான் நம்புகிறேன். காக்கை குருவி எங்கள் சாதி என்றது அவரல்லவோ? அது வெறும் கவிதை வரி அல்லவே. அதுதானே பாரதியின் வாழ்க்கை நெறி.

(வருவார்கள்)